வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்று வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, பல்கலைக்கழ மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆளுநருடன் ஆலோசனை நடாத்தப்பட்டது.
மேலும் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றைக் குழுவினர் முன்வைத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தமது பல்கலைக்கழகத்தின் புதிய பீடத்தை ஆரம்பிப்பதற்கான திட்டமுன்மொழிவு தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன், வவுனியாப் பல்கலைக்கழத்தின் நிர்வாகப் பிரிவின் உதவிப் பதிவாளர் திருமதி தவகிருபா பிரணவமலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.