சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு வலுசக்தி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது அவதானம் குவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கும், வலுசக்தி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதோடு , சூரிய சக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும் அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.
ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு மந்த நிலையில், செயல்திறன் அற்றவையாக காணப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து – அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் மின் பொறியியலாளர் குமார ஜயகொடி, இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டீ.எம்.டபிள்யூ.ஜே.பண்டார, இலங்கை மின்சாரம் (தனியார்) நிறுவனத் தலைவர் பொறியியலாளர் ஜனக அலுத்கே, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.