நெடுங்கேணியில் கணவன் கொலை – மனைவி தற்கொலை!

கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவியும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய லோகநாதன் மற்றும் 37 வயதுடைய அவரது மனைவியான லோகநாதன் பரமேஷ்வரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் முரண்பாடு காரணமாக சில காலங்களாக பிரிந்திருந்ததாக ஊரார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கணவனின் தலையில் இரத்தக்காயம் இருக்கும் நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இச் சம்பவமானது குறித்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!