ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை…! ரிஷாட் எம்.பி தெரிவிப்பு…!

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னர் எமது கட்சியின் உயர்பீடம் ஒன்றுகூடி யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்  தெரரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பகுதியில் விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையிலே ஜூலை மாதத்திற்கு பின்னர் தேர்தலுக்கான வேலைப்பாடுகளை செய்யவேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது

ஒக்டோபர் மாதமளவில் தேர்தலை நடத்தியாக வேண்டும். இதைத்தான்  எங்கள் அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது.

அதில் எந்த மாற்றங்களையும் செய்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஜனாதிபதி தேர்தல் வந்தே தீரும். அதற்கு முன்னர் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை வைக்கலாம். அவ்வாறு இல்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில் நடந்தே தீரும் இல்லை என்றால் எதிர்காலத்திலே இந்த நாடு இருள் மயமாகிவிடும்

அதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்தும் எமது நாட்டை உற்றுனோக்கி பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

பொருளாதாரத்தில் வீழ்ந்து உலகத்திற்கு 50 பில்லியன் அளவிலே கடன் செலுத்த வேண்டிய நாடாக இருக்கின்ற எமது நாட்டிலே ஜனநாயக ரீதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்ற விடயத்தில் எந்த ஒரு கேள்விக்கு உட்படுத்தும் விடயமோ அல்லது நிறுத்தப்படுவதோ அல்லது வேறு சாட்டுக்களை சொல்வதோ முடியாத விடயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தே கடந்த பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிட்டோம் அதனை தொடர்ந்து தற்போது வரை அதே கூட்டணியினரோடே பயணித்து வருகின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுகின்ற போது எமது கட்சியின் உயர்பீடம் தேர்தலில் எந்த வேட்பாளரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!