இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயல்படும் மற்றும் இனவாதக் கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தான் ஒரு இனவாதி அல்ல என கூறியுள்ளார்.
பௌத்தத்தை பாதுகாப்பதற்காக தான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இனத்துவம் என வரையறுக்கப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் நாட்டையும் தான் ஒரே விதத்தில் நேசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மதவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தற்போது பலர் ஒரு கலாச்சாரமாக பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதன் அர்த்தங்களை சரிவர புரிந்து கொள்ளாது பலர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம் மற்றும் இனத்துவம் என்பது இரு வேறு விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு இனம் மாத்திரம் சிறந்ததென போராடுவது இனவாதம் எனவும் ஒரு இனத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இனத்துவம் எனவும் சரத் வீரசேகர விளக்கியுள்ளார்.
இதற்கமைய, தனது இனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை எதிர்த்து குரல் கொடுப்பது இனவாதமாக கருத முடியாதென அவர் கூறியுள்ளார்.