நாட்டில் இரவு நேர பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்: டயானா கமகே தெரிவிப்பு

நாட்டிலுள்ள கடலோரப்பகுதிகளில் பொழுதுபோக்கு நிலையங்களை உருவாக்கி இரவு நேரப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய , ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிகரிப்பதற்கு இரவு நேர பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பதன் மூலம் இரவு நேரப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்பதோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வதற்கு விரும்புவதால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என கோரியுள்ளார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற நிலையில், அவர்கள் இந்த நாட்டிற்கு வந்து பொழுதுபோக்கக்கூடிய வகையில் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிடடுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!