இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள்!

நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிகளுக்கு உள்வாங்குவதற்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இருபது இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும சமூகப் பாதுகாப்பு நிவாரணத்தை வழங்குவதே இந்த ஆண்டு அரசாங்கத்தின் முக்கிய பணியாகும்.

வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அதில் இந்த வருடத்தில் 3 இலட்சம் பேரை வலுவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களங்களை மேம்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் சுமார் 25,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் சேவையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர்களில் சுமார் 2000 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை நலன்புரிப் பணிகளுக்காக மாத்திரம் செயற்படும் நிறுவனமாக இல்லாமல் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நிறுவனமாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.

அதேபோன்று, இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிக்கு உட்படுத்துவதற்கு சீனாவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10 ஆயிரம் பேரை வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் ஒரு இலட்சம்ட பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இவ்வருடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளோம்” என அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!