நாளைய போராட்டத்தை தனிப்பட்ட சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்தாதீர் – யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரிக்கை!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தின் நியாயத்தன்மையைப் புரிந்துகொண்டு, அதனைத் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவ் அறிக்கையின் முழு விவரமும் வருமாறு:

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக் கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழுக் அடைப்புப் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்குகின்றது.

அதேவேளை, இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப் போகச் செய்யப்பட்டமையே வரலாறு. இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி உட்பட தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய வகையில் சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகளை வெளிக் கொணர வேண்டியது அவசியமானது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்விவகாரத்தின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டு, இதனை தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதோடு அனைவரினதும் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!