யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்ட விரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையின் காணிச் சொந்தக்காரர்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் ஆனால் கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விகாரை தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தையிட்டி விகாரை தொடர்பான விடயத்தை பிரஸ்தாபித்தார். அந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினார்.
விகாரைக்குரிய காணியிலேயே கட்டப்பட்டுள்ளதாக முதலில் கருதியதாகவும் பின்னரே அது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அது தவறு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டிய போதும் அவர் அதனைச் செவிமடுத்தாரே தவிர தீர்வை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது. அந்த மக்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டவிரோத கட்டடத்தை எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த விகாரைக்கான அடிக்கல் நடப்பட்ட மறுநாள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே தீர்மானம் பின்னர் யாழ். மாவட்டச் செயலகத்திலும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரினர். யாழ். மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்தைகயதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆராய்ந்தே அவ்வாறானதொரு தீர்மானத்தை மீள நிறைவேற்றமுடியும். இப்போது, அந்த விகாரைக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கருத்தை பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.