வடக்கின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்க்கு எதிராக – அவரது யாழ்ப்பாண வருகைக்குக் கண்டணம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்படவுள்ளதாக அறியவருகிறது.
திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் முன்னர் வடக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த காலத்தில், நிரந்தர நியமனம் உட்படப் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத் தொண்டர்களால் ஆளுநர் அலுவலக வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் உட்படத் தொடர்ச்சியான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், அப்போது ஆளுநராகப் பதவி வகித்த திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் எதுவிதமான தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை.
தற்போது அவர் மீண்டும் ஆளுநராக நியமனம் பெற்று, எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவருக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் ஒருவரின் விசுவாசிகள் சிலர் முனைவதாக நம்பகரமாக அறியக் கிடைத்தது. இந்தப் போராட்டத்தில் சுகாதாரத் தொண்டர்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
