இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சாந்தன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாகி வரும் நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்தள்ளது.
அக்கோரிக்கையில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுடைய கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் சிறப்பு முகாமிலே தடுத்துவைக்கப்பட்டு சிறைக் கைதிகள் போன்று தமது வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இலங்கைக்கு சென்று குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதி கோரிய போதும் இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய நிலையில் சாந்தன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க இம்மாதம் 03ம் திகதி இந்திய துணைத்த}துவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திருந்த போது, இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களோடு இணைந்து வாழ வழியேற்படுத்தி கொடுக்குமாறும் கேட்டிருந்தோம்.
இத்தகைய நிலையில், சுகயீனம் காரணமாக சாந்தனின் உடல் நிலை மிக மோசமாக சென்றிருப்பதானது, அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் – இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் எடுத்தும் – இந்திய மத்திய அரசும், தமிழக அரசும், சிறிலங்கா அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீளத்திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும், குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.