யாழ்ப்பாணணத்தில் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுவரும் நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் இந்த முடிவினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் விசனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கொரோனாச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்தும் இந்தச் சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி போதனா வைத்தியசாலையால் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்கான சோதனையை முன்னெடுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் நேற்று சூம் செயலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலும் இந்தத் தகவல் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற வருபவர்களில் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு வேறு நோய்கள் இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே கொரோனாப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் அதிகாரிகள் வாய்மொழி மூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.
இதேநேரம், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்குத் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலுக்குச் சிகிச்சைப் பெறச் சென்ற ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குக் கொரோனாப் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.