வடக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இசைத் திறமையை வெளிக்கொணரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை போட்டி ஒன்றை நடாத்துவதற்குத் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல் 15ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலய பிரதான மண்டபத்தில் இந்த இசை போட்டிகள் இடம்பெறவுள்ளன.
போட்டிகளில் பங்கெடுக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் போட்டி இடம்பெறுகின்ற தினத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையான காலப் பகுதியில் போட்டி இடம்பெறும் மண்டபத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும். போட்டியாளர்கள் தனிப்பாடல், தனிவாத்திய இசைக்கே அனுமதிக்கப்படுவர்.
போட்டியாளர்கள் தமக்கு விருப்பமான ஏதாவது ஒரு பாடலை (கர்நாடக சங்கீதம் / திரையிசை / மேலைத்தேயம்) 6 நிமிடங்களுக்குள் பாட முடியும்.
வாத்தியம் இசைப்போர் அதற்கான வாத்தியக் கருவியைக் கொண்டு வருதல் வேண்டும்.
போட்டி நிறைவுறும் வரை பாதுகாவலர் ஒருவராவது போட்டியாளருடன் இருக்க வேண்டும். போட்டிகளில் மாறுறுத்திறனாளிகள் பால, வயது வேறுபாடின்றிப் பங்கெடுக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.