இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. வடபகுதி கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையே இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும், ஜனாதிபதியை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புத் தரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்துவதென இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றில் பேசிய போது, இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையைப் பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஊடக சந்திப்பில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.