இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக்கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளைப் பகிஷ்கரித்து கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட மூன்று மாணவர்களை குற்றத் தடுப்பு பொலீஸார் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும், இன்று அந்த விசாரணைக்குச் செல்லுமாறும் பல்கலைக்கழக அதிகாரிகளால் தாம் பணிக்கப்பட்டதைக் கண்டித்தே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை முதல் அனைத்துப் பீடங்களிலும் தமது விரிவுரைகளைப் புறக்கணித்த மாணவர்கள் முற்பகல் 10:30 மணியளவில் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாகக் கூடி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, “நிறுத்து – நிறுத்து: விசாரணைகளை நிறுத்து”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.




