மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, இலங்கையின் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், வரும் மாதங்களில் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.
உலகளாவிய எண்ணெய் நுகர்வில் 20 வீதத்தைக் கையாளும் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போர் பாதுகாப்புக்கான கடல்சார் காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரித்து வருகின்றன – சில சந்தர்ப்பங்களில் 1,000 சதவீதத்திற்கும் அதிகமாக – இந்த முக்கியமான கடல்சார் பாதை வழியாக எரிசக்தியை நகர்த்துவதற்கான செலவை வியத்தகு முறையில் அதிகரிக்கின்றன என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு குறைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் விலைகள் ஏற்கனவே 5 முதல் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனுமதிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ. 311 செலுத்தினோம். கடந்த வெள்ளிக்கிழமை ரூ.312 செலுத்தினோம்.இந்த வாரம் இது மேலும் அதிகரிக்கக்கூடும். கூடுதலாக, வளைகுடாவில் மோதல்கள் விரிவடைவதால் அதிக சரக்கு கட்டணங்களை நாங்கள் ஏற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இலங்கை சீனி, பருப்பு, வெங்காயம், ரின் மீன் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதிகள் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுப் பாதுகாப்பு குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. பயறு, உளுந்து மற்றும் தட்டைப்பயறு உள்ளிட்ட ஆறு வகையான தானியங்களின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவை குறித்த அறிக்கையை அமைச்சர் கோரியுள்ளதாகவும் ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
