ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ உள்ளிட்ட அந்தப் கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சாட்சியாளர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டியுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கில் பிரதிவாதிகளான விமல் வீரவன்ஸ, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க மற்றும் பியசிறி விஜேநாயக்க, மொஹமட் முஸம்மில் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான ரொஜர் செனவிரத்ன சுகவீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என அவரது சட்டத்தரணிகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டது.
