தொடரும் வன்முறைகள் பொலிஸார் அசமந்தம்

யாழ் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று 21ஆம் திகதி இரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமடைந்துள்ளன.

குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!