நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பின்னிரவு கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்குதல் மற்றும் விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும், போராடுதல்,கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யப்பட வேண்டும், மாணவர்களின் கற்றலிற்காக சுதந்திரத்தை உறுதி செய்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும், விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று பகல் முதல், பல்கலைக்கழக முன்றலில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை , மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டபக் கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார்.
கதவின் பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது
அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும் , கோரிக்கையை ஏற்க தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில் கலந்துரையாடியுள்ளனர்.
அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள் கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகியது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வர முதலே அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்பு தடை விதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்களைக் கற்றல் மண்டபத்தினுள் வைத்து பூட்டிய விரிவுரையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லாசனங்களை அடித்து உடைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
பல்கலை கழகத்தில் விரும்பிய பாடத்தை தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆனால் அவற்றைக் கேள்வி கேட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்துள்ளார்கள்.
மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூதவையோ , பேரவையோ கடந்த 08 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூதவை மற்றும் பேரவை ஆகியவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தனர்.