“தவறு செய்யும் எவரையும, எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த மட்டத்திலும் தவறு செய்தாலும், அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை உருவாக்கினர். அந்த தனித்துவமான நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊடகங்களின் தலைமை அலுவலர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, “ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்நாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர். வெவ்வேறு அரசாங்கங்களை கவித்துள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக, இந்நாட்டு மக்கள் எமக்கும் – தேசிய மக்கள் சக்திக்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கிய வரலாற்று ஆணையின் பொருள் மற்றும் சாரம்சம் பற்றிய விரிவான விளக்கத்தை இம்முறை நாங்கள் பெற்றுள்ளோம்.
தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை உருவாக்கினர். அந்த தனித்துவமான நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த மட்டத்திலும் தவறு செய்தால் அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
சரியான நேரத்தில் இது தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். ஏழு தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார மற்றும் அரச ஊடகங்களின் தலைமை அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.