அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தரமான அரச சேவைக்குத் தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாகாண சபைப் பொறிமுறையை வலுப்ப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆளுநர்களுக்கு இவ்வாறு உத்தரவிட்டார்.
இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து ஆளுநர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூகத் தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததுடன், புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பைப் பாதிக்காத வகையில் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.
இதன் போது வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும், மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது. கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.