இந்தியாவின் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற இந்திய மதிப்பில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காயை மண்டபம் மரைன் பொலிஸார் பறிமுதல் செய்து தப்பியோடிய மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திங்கட்கிழமை (29) நள்ளிரவு மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி துறைமுக பகுதியில் மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குந்துகால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் மரைன் பொலிஸாரை கண்டதும் 3 நபர்கள் மூடை ஒன்றை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த மரைன் பொலிஸார் அந்த மூடையை சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து ஏலக்காய் மூடையை கைப்பற்றிய மரைன் பொலிஸார் ஏலக்காய் மூடையை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றபட்ட ஏலக்காய் மூடை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஏலக்காய் இந்திய மதிப்பில் 1 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் இந்த மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குந்துகால் கடற்கரை இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தும் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.