சீனாவின் செயற்பாடுகளுக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் – நாடாளுமன்றில் சித்தார்த்தன் எம்.பி!

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனாவின் செயற்பாடுகளைத் தடுக்கக் கூடிய வகையில் இலங்கை வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறுமேயானால் மிகவும் ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “வெளிவிவகார அமைச்சின் கொள்கை என்பது இலங்கை போன்ற மிகச் சிறிய நாட்டுக்கு மிக அவதானமாக இருக்க வேண்டிய விடயமாகும். இன்று பூகோள வல்லாதிக்க சக்தி ஒன்றே ஒன்றுதான், அது அமெரிக்கா. பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எல்லாம் இங்கு தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முயன்று கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே நாங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

1971ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது அன்று சிறீமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானிய யுத்த விமானங்கள் இங்கு வந்து எரிபொருள் பெற்றுக்கொண்டு மீண்டும் கிழக்கு பாகிஸ்தானுக்கு போகின்ற செயற்பாட்டுக்கு உதவிக் கொண்டிருந்தார். அப்போது இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியமாக எனது தந்தை கூட இது தவறு இதைச் செய்யாதீர்கள், இதனால் இந்தியாவுடன் நீண்டகாலப் பகை ஒன்று வந்துவிடும் என்று மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். ஆனால் அது நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அதன் பிறகு 1980களிலே ஜனாதிபதியாக வந்த ஜே.ஆர்.ஜெயவர்தன இந்திரா காந்தியுடன் பகைமை ஒன்றை உருவாக்கி, இந்திரா காந்தியும் அவருடைய மகனும் மாடும் கன்றும் என்று கூறி அது பிரபல்யமாக கூறப்பட்டது. அதே போல சிறீமாவோ பண்டாரநாயக்கவுடன் இருந்த ஆத்திரத்தில், சிறீமாவோ பண்டாரநாயக்கவும் அநுரவும், இந்திரா காந்தியும், சஞ்செய்யும், இப்படியாக பிரச்சினையை உருவாக்கி 1983 இலே மிகப் பெரிய இனக் கலவரம் ஒன்று உருவானது.

அந்த இனக் கலவரத்தின் பின்பு ஒரு நிலைமை உருவாகியது. அன்று மிக அமைதியான முறையிலே, சாத்வீக முறையிலே போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலமை உருவானது. ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கான ஒரு நிலைமை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவும் அந்த நேரத்திலே ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் இருந்த அந்தப் பகைமையால் அல்லது ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கு இந்தியாவுடன் இருந்த பகைமையால் அது ஒரு மிகப் பெரிய யுத்தமாக வெடித்து மிக நீண்ட காலம் அந்த யுத்தம் நடந்தது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால், அயல் நாட்டுடன் எவ்வளவு தூரம் நாங்கள் கவனமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.

இப்போது இந்தியாவுக்கு எதிராகச் சீனா இங்கு தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றது. சீனாவுடனோ அல்லது இந்தியாவுடனோ என இந்த வல்லாதிக்க சக்திகளுடன் நாங்கள் எதிர்த்துக் கொண்டு இருக்கவேண்டும் என்று நான் கூற வரவில்லை.

நான் கூறுவது, இவர்கள் அனைவரையும் பகைக்காத வகையிலே இலங்கை நடந்து கொள்ள வேண்டும் என்பது. அல்லாது போனால் அது நிச்சயமாக எங்கள் அனைவருக்குமே ஆபத்தாக முடியும். இலங்கையைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கிலே வாழுகின்ற நாங்கள் மிகவும் அவதானமாக வாழவேண்டி இருக்கின்றது. ஏனென்றால் சீனா இந்தியா வல்லாதிக்க சக்திகளுடைய பிரச்சினை எங்களை மிகவும் பாதித்துவிடும் என்று நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம்.

ஆகவே தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம், இந்தியா அயல்நாடு, என்ன பிரச்சினை என்றாலும் உடனடியாக இந்தியா வருகின்றது, இதனால் நாங்கள் அவர்களை மேவாமல் சில விடயங்களைச் செய்ய வேண்டியது இந்த நாட்டைப் பொறுத்தமட்டிலே எங்களுடைய ஒரு கடமையாக இருக்கின்றது.

கப்பல்கள் வந்து போவது, அதுவும் யுத்தக் கப்பல்கள் வந்து போவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். யுத்தக் கப்பல்கள் – சீனக் கப்பல்கள் இங்கு வருகின்ற போது எதிர்க்கின்றார்கள். யுத்தக் கப்பல் மீன்பிடிக்க வருவதில்லை, அவர்கள் ஏதோவொரு காரணத்திற்காகவே வருகிறார்கள்.

உங்களுக்குத் தெரியும், 2022ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சபாநாயகர் தாய்வானுக்குச் சென்றிருந்த போது சீனா அதை எவ்வளவு தூரம் எதிர்த்தது என்பது மாத்திரமல்ல தங்கள் கடற் படையைத் தாய்வானை நோக்கி நகர்த்தியது. அதே போல யுத்த விமானங்கள் தாய்வானுக்கு மேலால் பறந்து பயமுறுத்துகின்ற ஒரு நிலைமையை செய்தார்கள். இந்தியா அதைச் செய்யவில்லை. ஆனால், அவர்கள் அதிலே கரிசனையாக இருக்கின்றார்கள் – அக்கறையாக இருக்கின்றார்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இந்த நிலைமைகளைத் தவிர்த்து நாங்கள் ஒரு சிறிய நாடு. அது வங்குரோத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போது முன்னேறிக்கொண்டு வருகின்ற நாடு. ஆகவே, நாங்கள் சரியான முறையிலே வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறுவோமேயானால் மிகவும் இக்கட்டானதொரு நிலைக்குள் தள்ளப்படுவோம்.

வெளி விவகார அமைச்சர் இந்த விடயங்களைக் கையாளக் கூடியவர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் அவருக்கு உதவியாக அரசும் சில விடயங்களைச் செய்ய வேண்டும். இவைகளைத் தவிர்த்து நடப்பதற்கு தொடங்கினால் மிகப் பெரிய பிரச்சினை வரும் ” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!