யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாஹாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை உடனடியாக நடாத்துமாறு யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆலய மகோற்சவம் ஆரம்பமாக இருந்த நிலையில் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாகத் தடைப்பட்டிருந்தது. ஆலயத்தைப் பராமரித்துவரும் பூசகர்களிடையே யார் மஹோற்சவத்தை நடாத்துவது என்ற முரண்பாடு காரணமாக நேற்று மாலை ஆலயத்தின் பிரதான வாயிற் கதவு பொலீஸாரால் பூட்டப்பட்டு, திறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை இது தொடர்பான வழக்கு யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களின் பின்னர் ஆலய மகோற்சவத்தை சிவதர்சன் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தைக் குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று மாலை 5 மணிக்குத் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடனர ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.