யாழ்ப்பாணம் நகரை அண்டிய மனோகரா திரையரங்குச் சந்திப் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம், மனோகரா திரையரங்குச் சந்திப் பகுதியில் உள்ள பழரசக் கடை ஒன்றில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஆறு பேரில் மூன்று பேரே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி – பொலிஸ் அத்தியட்சகர் எஸ். மேனன் தலைமையிலான அணியே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள்வெட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் , இரவு வேளை பழரசக் கடை மூடப்பட்ட பின்னர் கடைக்கு வந்த சில இளைஞர்கள் பழச்சாறு தருமாறு கேட்டதாகவும், கடைப் பூட்டப்பட்டதனால் உரிமையாளர் பழச்சாறு தர மறுத்ததன் காரணமாகவே தாம் தாக்குதல் மேற்கொண்டதாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர் என்றும், தாக்குதலை மேற்கொண்ட குழுவில் 6 பேர் இருந்ததாகவும், அதில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.