கொழும்பு – கோட்டைக்கும், யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்குப் பின்னரே மீள ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு ரயில் மார்க்கத்தில் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப் பணிகளால், கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27ஆம் திகதி முதல் அது ஓமந்தையுடன் மட்டுப்படுத்தப்பட்டது.
இங்கு முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும். எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹோ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதால், ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.