உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் நேற்றுமுன்தினம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது தேர்தல் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னரும் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்திருக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் தேர்தலை நடத்தக்கோரிய மனு மீதான விசாரணையின் பின்னரும் தேர்தல் பரப்புரை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை.
இந்த நிலையில் தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும், தமது பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தித் தமது பரப்புரையை ஆரம்பித்தார். அதேநேரம் கட்சித் தொண்டர்கள் இரவிரவாக வீதிகளில் தமது பிரச்சாரப் போஸ்டர்களை ஒட்டத் தொடங்கயுள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றைய தினம் பரப்புரையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
