நாளை நடைபெறவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கான விதிமுறைகள் அறிவிப்பு

நாளைய தினம் ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 2362 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இப்பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன், 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இதில் அடங்கியுள்ளனர்.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிக்கவிருக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,

“உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, பரீட்சை நடக்கும் முழு காலப்பகுதியிலும் உங்களது முகம் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

அதேபோல் உங்களது காதுகளும் தெரியும்படி இருக்க வேண்டும். ஏனெனில், சில பரீட்சார்த்திகள் தற்போதுள்ள தகவல் தொடர்பு சாதனங்களை அணிந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பரீட்சை மோசடிகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.”

“மேலும் ஒரு விசேட விடயம் உள்ளது… பல்தேர்வு வினாப்பத்திரத்திற்கு விடையளிக்கும் போது, வினாப்பத்திரத்திலேயே விடைகளைக் குறிப்பீர்கள்.

ஆனால், நாம் வழங்கும் விடைத்தாளில் குறிக்கப்பட்ட விடைகள் மட்டுமே உங்களது விடைத்தாளாக ஏற்றுக் கொள்ளப்படும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் நேரத்தை முகாமைத்துவம் செய்து, சரியான விடைத்தாளில் குறிக்க வேண்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!