நாடு முழுவதிலும் கடமையாற்றும் பொலீஸாரில் முப்பது சதவீதத்தினரே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஏனையவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பலர் முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் பதில் பொலீஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சபரகமுவ மாகாணத்தில் உள்ள பொலீஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றிய போது, “நாட்டில் சுமார் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீதமான பொலீஸ் அதிகாரிகள் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 சதவீதமானவர்கள் தம்மை இன்னும் முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தவில்லை. மீதமுள்ள 30 வீதமானோர் மட்டுமே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
வீட்டில் உள்ள பிரச்சினைகள், வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் பிற காரணிகளால் சில அதிகாரிகள் பல்வேறு தொற்றா நோய்களை உருவாக்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டர்.
மேலும், பொலீஸ் அதிகாரிகளிடையுள்ள சம்பளக் குறைபாடுகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு முதல் புதிய சம்பளக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
