புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொம்பன் யானைகள் இரண்டும் தனிநபரொருவரின் காணியிலேயே உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
‘வாசல’ என்று அழைக்கப்படும் கொம்பன் யானை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும், ‘வலகம்பா’ என்று அழைக்கப்படும் மற்றைய கொம்பன் யானை கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிக வலு கொண்ட மின்சார வேலியைப் பொருத்தியமையினாலேயே இக்கொம்பன் யானைகள் இரண்டும் உயிரிழந்துள்ளதாகவும், ‘வாசல’ என்ற யானைக்கு 35 வயது இருக்கலாம் எனவும் ‘வலகம்பா’ என்ற யானைக்கு 40 வயது இருக்கலாம் எனவும் அதிகாரிகளால் கூறப்படுகிறது.
இரண்டு யானைகளும் உயிரிழந்து காணப்பட்ட காணி உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.