அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் வருகை தருவது அந்தப் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவிக்கையில்,
இந்த நிவாரணக் குழுக்களின் பணிக்குத் தமது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சில மாவட்டங்களில் வீதி புனரமைப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு அதிகளவான வாகனங்கள் வருவது அந்தப் பணிகளுக்குத் தடையாக உள்ளது என்றும், அத்துடன் சில மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை காணொளியாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது என்று தெரிவித்த அவர், எனவே, நிவாரணக் குழுக்கள் அந்தந்தப் பிரிவுகளுக்கு பொறுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளைத் தொடர்புகொண்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அனர்த்த நடவடிக்கைப் பிரிவு இலக்கங்கள் ஆன 071- 8595884, 071- 8595883,071- 8595882,071- 8595881, 071- 8595880 தொடர்புகொண்டு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
