விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அமெரிக்கப் பிரஜாவுரிமையுள்ள இலங்கையரான பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்தக சனத் குமாநாயக்கவிடமிருந்து பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி அன்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பணியாற்றிவரும் பேராசிரியர் உடுகமசூரிய, கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரசாயனவியலில் விசேட பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தையும், டெக்சாஸ் பல்கலைக்கழக தென்மேற்கு மருத்துவ மையத்தில் கலாநிதிப் பட்டத்துக்குப் பின்னான முதுநிலை ஆராய்ச்சியையும் நிறைவு செய்துள்ளார்.
சர்வதேச ரீதியாகப் பல காப்புரிமைகளைப் பெற்றுள்ள பேராசிரியர் உடுகமசூரிய, அமெரிக்க பொதுச் சேவையில் இருந்து இலங்கைக்கு வந்து ஜனாதிபதியின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் என்ற கௌரவப் பதவியைப் பெறவிருக்கிறார்.
