2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 568 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசேட தேவையுடைய மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில், சிறைக் கைதிகளுக்காகவும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காகவும் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களது ஆசனங்களில் அமர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். பரீட்சார்த்திகள் தங்களது அனுமதி அட்டைகளையும், அடையாள அட்டையையும் கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள், மாணவர்களது பரீட்சைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக் வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.