தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மறைந்த வீரமறவர்களை நினைவு கூரும் மாவீரர் வார நிகழ்வுகளின் வரிசையில் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாவீர்ர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டுகளின் காட்சிப்படுத்தல் இன்று மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இன்று முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நினைவாலயத்தை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட்டுத் தமது அஞ்சலியைச் செலுத்த முடியும்.
“அடுத்த தலைமுறைக்கு எம் இனத்தின் வரலாற்றைக் கடத்தும் வகையில் 1982 கார்த்திகை 27 இலிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் எமக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24 ஆயிரத்து 379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி இந்த நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.