நாடெங்கிலுமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாப் பணியாற்றிவரும் சுமர் 8 ஆயிரத்து 400 பணியாளர்களை நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட உள்ளதாகவும், மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களிலும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறை மேம்பாட்டுக்காக ரூபா 9 பில்லியன் வழங்கப்படவுள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ” கடந்த 36 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் செய்யத் தவறிய பணிகளை ஒன்றரை ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றோம்.
வட மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய 6 மாகாணங்களுக்கான காலவரையறையைத் தயாரித்து, பயிற்சிகளை வழங்கி 2024 ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
எமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ரூபா ஒன்பது பில்லியனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.