உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் நான்கரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
2020 ஆண்டு உதயன் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக இன்று அவரை விசாரணை செய்த பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணை இன்று காலை 9:00 மண் முதல் பிற்பகல் 01:00 வரை கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் இடம்பெற்றது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி உதயன் பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தியும், ஒளிப்படமும் வெளியாகியிருந்தது. அது தொடர்பாகவும், அன்றைய தினம் வெளியாகியிருந்த தமிழ்த் தேசியக் கட்சி மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த செய்தி தொடர்பாகவுமே வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரியவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் செய்தி மற்றும் ஒளிப்படம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாராலும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.